திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கரீம் ரோடு பகுதியில் வேலூர் மக்களவை உறுப்பினரின் மக்கள் சந்திப்பு அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கதிர் ஆனந்த் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு தொழிற்சாலை கொண்டுவர அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக மல்லகுண்ட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிப்காட் தொழிற்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைப்பதற்கு கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டியதாகவும் தற்போது மீண்டும் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ள வில்வநாதன் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆம்பூர் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆம்பூர் ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரெட்டி தோப்பு பகுதியில் பல்வேறு இடையூறுகள் உள்ளன.
அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க போதுமான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரெட்டி தோப்பு பகுதிக்கு அருகாமையில் OAR திரையரங்கம் எதிரே ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அதேபோல் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் பலமுறை தொடங்கப்பட்டு அப்பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்காக தேசியநெடுஞ்சாலை துறையுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்து உள்ளோம்.
அதன்படி, அந்த சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதா அல்லது கனரக வாகனங்களும் செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசி வெகு விரைவில் வாணியம்பாடி நியூ டவுண் ரயில்வே சுரங்கப் பாதை கட்டுவது குறித்து தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு
மேலும், அதேபோல ஆம்பூரில் திறக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்பு அலுவலகத்தில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் மனுக்கள் பெறப்படும் என்றும் இந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படுவதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாகவும் மனுக்கள் பெறப்படும்.
நான் வருவேன்
மேலும், நானும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நேரடியாக வந்து அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற உள்ளதாகவும்" தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எனது தாத்தாவை மக்கள் நம்புகிறார்கள் - கதிர் ஆனந்த் மகள்