திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், பெத்தூர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காலை முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதேபோல் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வேளாண் துறை உதவி அலுவலர், மழையால் சேதமடைந்த நிலத்தைப் பார்வையிட்டு அதற்கான இழப்பீடு தொகை ஒரு மரத்திற்கு ஆறு ரூபாய் வீதம் அரசால் வழங்கப்படும் என்று தெரிவித்ததாகவும், பயிரிடப்பட்ட காலத்திலிருந்து தற்போது அறுவடை செய்யும் நேரம் வரை சுமார் மூன்று லட்சம் ரூபாய் செலவாகி இருப்பதாகவும், அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.