நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காப்புக்காட்டுகளில் பெய்த கனமழையால் கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள சான்றோர் குப்பம் ஏரி நிரம்பியது.

நேற்று மாலை வரை பெய்த கனமழையால் ஏரியில் வெள்ள நீர் நிரம்பி ஏரிக் கரையை தாண்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் ஏரி கரையை ஒட்டியுள்ள சான்றோர் குப்பம் நகராட்சி தொடக்கப்பள்ளியின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அதனோடு சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால், ஏராளமான வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். தற்போது வெள்ள நீர் புகாத வண்ணம் தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு