திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 12ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கடைகள் நடத்தி வந்ததற்காக, பழக்கடைகளை எல்லாம் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் சேதப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மறுநாள் பழக்கடை நடத்திவரும் பெண்ணை நேரில் சந்தித்து, தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.
நகராட்சி நிர்வாக ஆணையம், சர்ச்சைக்குள்ளான ஆணையரை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. இந்நிலையில் இன்று காலை முதல் பழக்கடை நடத்திவரும் பெண் உள்பட மூன்று பேர், சர்ச்சைக்குள்ளான நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆகியோரிடம் நகராட்சிகள் நிர்வாக மண்டல இணை இயக்குநர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும், அறிக்கையாக உயர் அலுவலர்களுக்கு அனுப்பவுள்ளதாக விசாரணை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சாமானியர்கள் மீது அராஜகம்: வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்