கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 இரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், இன்று அதிகாலையில் கரையைக் கடந்தது.
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, மாதனூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆம்பூர் கிராமப்புற சாலையில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக கேத்தாண்பட்டி சர்க்கரை ஆலை பகுதியில் 119.2 மி.மீ மழை பெய்துள்ளது.