திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர் மீது ஆசிட் வீச்சு! - thirupatur
திருபத்தூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை கண்டித்த கணவர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமன் (45). இவருக்கு வேண்டாம்மாள் (35) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வேண்டாம்மாள் ஆம்பூர் பகுதியிலுள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்ற ஜேசிபி ஓட்டுநருடன் வேண்டாமாளுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த வேடம்மாளின் கணவர் ராமன் சக்திவேலை பலமுறை எச்சரித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 9ஆம் தேதி ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியில் சக்திவேல் ராமனை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை ராமனின் முகம் மற்றும் மார்பு பகுதியில் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து ஆசிட் பட்டத்தால் அலறி துடித்த ராமனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து ராமனின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சக்திவேலைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சக்திவேலின் தொலைப்பேசியை வைத்து சக்திவேலின் இருப்பிடத்தைக் கண்டறிந்த காவல் துறையினர் அவரை நேற்று (ஜூலை 12) மாலை கைது செய்தனர். இதையடுத்து அவரை ஆம்பூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்