தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணண் கோயில் பின்புறம் ஜான்பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான கால்நடை மருந்துக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு இளைஞர் ஒருவர் டிப்டாப்பாக வந்துள்ளார்.
அப்போது கடையில் இருந்த பெண் ஊழியரிடம் அவர் கால்நடைகளுக்கான சில மருந்துகளின் பெயர்களைக் கூறி கேட்டுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் கேட்ட மருந்துகளை எடுக்க கடையின் உள்ளே சென்றுள்ளார். அந்தப் பெண் ஊழியரிடம் தொடர்ச்சியாக மருந்துகள் பெயரைச் சொல்லியதால் பெண்மணி திரும்பியபடி மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்துள்ளார்.
![டிப்டாப் இளைஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9737562_youth.jpg)
இதற்கிடையில் அந்த இளைஞர் தனது கைவரிசையை கடையின் கல்லாவில் காட்டியுள்ளார். திடீரென அந்த நபர் தான் சொன்ன மருந்துகளைப் பார்சல் செய்துவைக்குமாறும் அதனை எடுத்துச் செல்ல ஆட்டோவை கூப்பிட்டுவருவதாகவும் பெண்ணிடம் கூறியுள்ளார்.
ஆனால் வெகுநேரமாகியும் அந்த இளைஞர் திரும்பிவராததால் சந்தேகம் அடைந்து பெண், ஜான் பிரிட்டோவிற்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து கடைக்கு வந்த ஜான் பிரிட்டோ அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தார்.
அதில், அந்த இளைஞர் பெண் ஊழியரின் கவனத்தை திசைத்திருப்பி கடையிலிருந்து 25 ஆயிரம் ரூபாயைத் திருடியது தெரியவந்தது. உடனே இது குறித்து ஜான்பிரிட்டோ கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த இளைஞரைத் தேடிவருகின்றனர்.