தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையத் திடலில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த 5ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியானது நிறைவு பெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புத்தக கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
புத்தக கண்காட்சியை பார்வையிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடியில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. புத்தகத் திருவிழாவில் கலை பண்பாட்டு நிகழ்ச்சி, கிராமிய கலைகள், கருத்தரங்குகள், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் அரங்கேற்றப்படுகின்றன. ஆறு நாட்களில் ரூ.60 லட்சம் அளவுக்கு புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் புத்தக விற்பனை மதிப்பு ரூ.1 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை 60 ஆயிரம் பேர் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு சென்றுள்ளனர். இதில் ஏராளமான பள்ளி-மாணவ மாணவிகள் அடங்குவர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேசுகையில், “தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பாக 100 பள்ளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கு புத்தகங்களை வாங்கி பரிசாக தர முடிவு செய்துள்ளோம். இது துறைமுக பொறுப்பு கழக சமூக நல நிதியின் கீழ் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் புத்தகம் வடிவில் அமர்ந்து வாசித்த 1000 மாணவர்கள்!