தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெல் நிறுவன பொறியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட பரிசோதனை இன்று அனைத்து கட்சி பிரதிநதிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில் தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் கலந்துகொண்டார்.
பின்னர் அனைத்து கட்சி பிரநிதிகளின் சந்தேகங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் விளக்கினார்கள். அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "2021ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களான கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவி பேட் ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளது.
இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேர்த்து இரண்டாயிரத்து 795 கன்ட்ரோல் யூனிட், மூன்றாயிரத்து 668 பேலட் யூனிட், மூன்றாயிரத்து 36 விவி பேட் இயந்திரங்கள் அனைத்து கட்சி பிரதிநதிகள் முன்னிலையில் முதல் நிலை ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆயிரத்து 603 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வந்த 33 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை" என்றார்.
இதையும் படிங்க: ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார்:அர்ஜுன மூர்த்தி