தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது, தூத்துக்குடி தாளமுத்துநகர், வடபாகம், சாயல்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சரவணன் மீது பிரபல ரவுடியான பட்டு என்ற பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
![கொலை செய்யப்பட்ட சரவணன், தூத்துக்குடி கொலை சம்பவம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4291142_img.jpg)
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி மாலை, சரவணன் தனது வீட்டில் இருந்தபோது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிராஜபுரத்தில் நடந்த பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக சரவணன் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்த வீட்டில் தனது ஏ.டி.எம் கார்டை தவற விட்ட மேலகுளம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மகராஜன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்த வடிவேல் (39), மீளவிட்டான் வடக்குத் தெருவைச் சேர்ந்த பாலசிங் (39) ஆகிய இருவரும் சிவகாசி ஜேஎம் எண் 1 நீதிமன்றத்தில் திடீரென சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் மாரிமுத்து உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.