தூத்துக்குடி - புல்லா வழி கடற்கரை முகப்புப்பகுதியில், ரத்தம் வழிந்த நிலையில், டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருப்பதாக தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் விமல் குமார் தலைமையிலான காவல் துறையினர் இறந்த நிலையில், கரை ஒதுங்கிக் கிடந்த டால்பினை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இறந்து கரை ஒதுங்கிய டால்பின் சுமார் 12 அடி நீளமும் 600 கிலோ எடையும் உடையது. பெண் இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் அரிய வகை பாலூட்டி விலங்குகளில் ஒன்று. டால்பின் சூரிய ஒளியைப் பார்க்க, கடல் நீர் மேற்பரப்பிற்கு வரும்பொழுது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பாறை இடுக்கில் மோதி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே டால்பினின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க... யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை!