தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் அண்டோ ஜீனியஸ். இவரது மனைவி மரிய சில்வியா (27). இன்னாசியர்புரம் பகுதியில் உள்ள நீம் பவுண்டேஷன் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் (42) மற்றும் மனைவி கவிதா (32) ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு மரிய சில்வியாவிடம் அறிமுகமாகியுள்ளனர்.
மேலும், இருவரும் தாங்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதியோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களைக் கண்டறிந்து பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்ய 50,000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
முன்பணம் செலுத்தினால் மாதம்தோறும் 15,000 ரூபாய் சம்பளம் தருவதாகவும், 15 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்றும், அரசு வேலை கிடைத்துச் சென்றாலோ அல்லது இடையில் வேலையை விட்டு நின்றுவிட்டாலோ முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, மரிய சில்வியாவின் வங்கிக் கணக்கிலிருந்து நீம் பவுண்டேஷன் வங்கி கணக்கிற்கு கூகுள் பே (GPay) மூலம் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, அரசின் எவ்வித வழிகாட்டு முறைகளும் இல்லாமல், முறைகேடாக சிலுவைப்பட்டி பகுதியிலுள்ள ஒரு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமித்து, ஒப்புக்கொண்டபடி மாதம்தோறும் ரூ.15,000 கொடுப்பதாகக் கூறிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்காமலும், செலுத்திய முன்தொகையை திருப்பித் தராமலும் இருந்துள்ளனர்.
இவ்வாறு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மரிய சில்வியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி மற்றும் தலைமைக் காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, லூயிஸ் ராஜ்குமாரை இன்று கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லூயிஸ் ராஜ்குமார் மற்றும் மனைவி கவிதா ஆகிய 2 பேரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்பணமாக 50,000 ரூபாய் வீதம் பெற்றுக் கொண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி அமர்த்தி ஒப்புக்கொண்டபடி சம்பளம் வழங்காமலும், முன் தொகையை திருப்பித் தராமலும் ஏமாற்றி சுமார் ரூபாய் 15 லட்சத்துக்கும் மேலாக முறைகேடாக பெற்று நம்பிக்கை மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை!