தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு காயல்பட்டிணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சையளிக்காமல் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இங்கு கரோனா வார்டில் அனுமதிப்பதற்கான 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டு அருகில் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். வீல்சேரில் சுமார் 2 மணிநேரம் அந்த முதியவர் இருந்தால் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து அவரை கரோனா வார்டில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவருக்கான கரோனா பரிசோதனை என்பது செய்யப்படவில்லை.
மேலும், எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை இந்த நிலையில் இன்று(ஜூலை.10) காலையில் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது . இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை வார்டில் அனுமதித்துள்ளனர்.
அங்கும் அவருக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் இன்று மாலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக எந்தவிதமான பதிலையும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரோனா சிகிச்சைக்கு வந்த முதியவருக்கு இரண்டு நாள்களாக கரோனா பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் வைத்திருந்தது நோயாளிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறையான சிகிச்சையளிக்காத காரணத்தால்தான் இந்த முதியோர் இறந்தார் என அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் , தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று மட்டும் 198 பேருக்கு கரோனா அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாத காரணத்தால் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல பலருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் எந்தவிதமான பாதுகாப்புமின்றி இருப்பதாகவும், கரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக வெளியில் வந்து உணவு விடுதியில் உணவு உண்டு விட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் மூலம் அதிக அளவிலான கரோனா பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.