கோவில்பட்டி அருகே, பரசுராமன்பட்டியில் நகரும் நியாயவிலைக் கடையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக நெல்லை மாவட்டத்தோடு இணைந்தே தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிறப்பு நீதிமன்றமும் செயல்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசின் முயற்சியின்பேரிலும், வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தனிச்சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார். திரைப்படத்தில் நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன், நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்திற்கு அது நல்லது.
சினிமாவுக்கான கேளிக்கை வரி குறைப்பு, சினிமா டிக்கெட் கட்டணம் ஆகியவை அதிமுக ஆட்சியில் தான் வரைமுறைபடுத்தப்பட்டுள்ளன. மேலும், திரையரங்கு பாராமரிப்புக் கட்டணம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இவைதவிர திரைத்துரையினருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆலோசனை, திரையரங்குகள் திறப்பு ஆகியவை பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும்'' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ஆளுநர் ஆட்சியா? ராமதாஸ் கேள்வி