கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுசெய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 13ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரவுள்ளார். இதையொட்டி, தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிகர்கள் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்கள். திரைப்படத்தில் நடித்து வந்தபோதும் சமுதாயப் பணியில் ஆர்வம் காட்டியவர்கள். அதேபோல், இன்று உள்ள முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்புகூட அவர் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை கீழே அமர்த்திய செயலுக்கு ஊராட்சி மன்ற செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் சமூக மக்களுக்கு அதிமுக ஆட்சிதான் பாதுகாப்பாக இருந்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ’விரக்தியில் உள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ