தூத்துக்குடி: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் ஆதிபரமேஸ்வரன் (எ) பரமன் (25), இவர் மீது மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் மதுரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அங்கு அவர் அடிக்கடி தன்னை தானே தாக்கிகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாலும் மேலும் மதுரை மத்திய சிறையில் மற்ற கைதிகளால் ஆதிபரமேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து இருந்ததாலும் அவரை மதுரை சிறையில் இருந்து தூத்துக்குடி பேரூரணி சிறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், பேரூரணி சிறையில் இருந்தபோது இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்டபோது திடீரென்று மருத்துவமனை வளாகத்தில் கிடந்த தகரத்தை எடுத்து கையில் அறுத்துக் கொண்டார்.
அப்போது சிறையில் தன்னை சாதி ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும்; மனு பார்ப்பதற்கு 2000 ரூபாய் பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் காயம் அடைந்த ஆதிபரமேஸ்வரனை உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து சிறைக்கைதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சிறைக் கைதியான ஆதிபரமேஸ்வரன் (எ) பரமன் சிறையில் இருக்கும் பொழுது சைக்கோ போல் அடிக்கடி தன்னைத் தானே தாக்கி கொள்வதை வழக்கமாக கொண்டு வந்ததாகவும், இதனால் அவர் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.