தூத்துக்குடி மாவட்டத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி நிர்வாகி தொண்டர் சுப்பிரமணியன். இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, சுப்பிரமணியன் என்பவர் போக்குவரத்து காவலரின் சீருடை போல் உடை அணிந்து, அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆட்டோவில் தண்ணீர் கேன்கள் எடுத்து வரப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு ஆய்வாளராக செயல்படும் அலுவலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் தண்ணீர் கேன் ஏற்றி வரும் வாகனங்களை நகரத்திற்கு உள்ளே அனுமதிக்கிறார். இதனை வெளிக்கொணருவதற்காகவே காவலர் சீருடையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தேன்" என்றார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.