தூத்துக்குடி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்த நிலையில் இன்று (டிசம்பர் 17) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜு கலந்துகொண்டார்.
அது அதிமுக தேர்தல் வாக்குறுதிதான்!
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளரைச் சந்தித்த கடம்பூர் ராஜு கூறுகையில், "திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு விலக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததன் மூலம் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் நான்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
மாணவர்களின் கல்விக்கடன், விவசாய நகைக்கடன் தள்ளுபடி போன்றவை அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையும், இழப்பீட்டுத் தொகையும் தற்போதுவரை வழங்கப்படவில்லை.
ஊழல் குறித்து திமுக விமர்சிக்கலாமா?
ஜனவரி 31ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையும், இழப்பீட்டுத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎனில் அதிமுக சார்பில் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவருகிறது. இதற்குச் சாட்சியாக தற்பொழுது முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
அதைப்போல அமைச்சர் தங்கமணியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்களை ஊழல் அமைச்சர்கள் என திமுகவினர் விமர்சித்துவருவது கேலிக்குரியது.
வழக்கை சந்திக்கும் ஊழல் செய்த திமுக அமைச்சர்கள்
ஏனெனில் ஊழல் செய்ததற்காக திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தற்பொழுதும் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்தித்துவருகிறார்கள். நாங்கள் ஊழல்வாதிகளா, இல்லையா என்பதை திமுகவினர் முடிவு செய்யக்கூடாது.
அதை நீதிமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அதிமுக எடுத்துவருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே! - ஜெயக்குமாரின் கலகல கண்டன உரை!