திருவாரூர்: மேகேதாட்டுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலங்கைமானில் விவசாயிகளுக்கான கூட்டம் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பி.ஆர். பாண்டியன், "சுய அரசியல் லாபத்திற்காக பல்வேறு சட்டவிரோதமாக திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தியதால் காவிரி டெல்டா அழியும் நிலையில் உள்ளது.எனவே, 2018க்குப் பிறகு கொடுக்கப்பட்ட புதிய நீர்ப்பாசன திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
காவிரியில் புதிய இணைப்பு கால்வாய் அமைத்து பாலாற்றில் கலக்கச் செய்து சென்னையை சுற்றி இருக்கிற 3,500 ஏரிகளில் காவிரி தண்ணீரை கொண்டு நிரப்புவதற்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அரசு கைவிடவேண்டும்.
![The BJP is fully responsible if the Karnataka Tamils are affected pr Pandian](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-farmers-leader-speach-script-tn10029_02082021195702_0208f_1627914422_1110.jpg)
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு-கர்நாடக காவிரி உரிமை பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் இரண்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர இருக்கிறோம். காவிரியில் புதிய திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி வழங்க வேண்டுமென உறுதியாக தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம்கூட அனுமதி வழங்க முடியாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, இதனை அரசியல் தலையீடு இன்றி முழுமையும் நிறைவேற்றுவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றமும் உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
![The BJP is fully responsible if the Karnataka Tamils are affected pr Pandian](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-farmers-leader-speach-script-tn10029_02082021195702_0208f_1627914422_583.jpg)