குறுவை சாகுபடிக்காக கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்தடைந்தது. மூணாறு தலைப்பிலிருந்து வெண்ணாறு, பாமணி ஆறு உள்ளிட்ட ஆறுகள் முழுமையாக தூர்வாரப்பட்டதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 23 பிரதான பிரிவு ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகளில் முக்கியமான ஓடம்போக்கி ஆற்றில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மீதமுள்ள சுமார் 10 கிலோமீட்டர் வரை ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படாததால் தண்ணீர் திறந்துவிட்டாலும், விளைநிலங்களுக்கு நீர் சென்று சேருமா என்பது அச்சமாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஓடம்போக்கி ஆற்றை நம்பியுள்ள 2000 ஏக்கர் விளைநிலங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகுவதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு மீதமுள்ள 10 கிலோமீட்டர் வரை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: தண்ணீருக்காக காத்திருக்கும் விளைநிலங்கள்!