காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக குறுவை, சம்பா சாகுபாடி பொய்த்து விட்டது. மேலும் இந்தாண்டு விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையும் பாசனத்திற்கு செல்லாமல் வீணாகி கடலுக்குள் சென்று கலந்துள்ளது.
தற்போது பெய்த மழையை வைத்து விவசாயிகள் சம்பா பயிர் நடவு செய்துள்ளனர். ஆனால் பயிரிட்டு 25 நாட்களை கடந்தும் அடி உரம் இடுவதற்கு வேளாண்துறையில் யூரியா இல்லாமல் சிறு குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் உரக்கடைகளில் விற்கப்படும் யூரியா பெரு விவசாயிகளுக்கு மட்டுமே அதிக அளவில் விற்கப்படுவதாகவும். சிறு குறு விவசாயிகளுக்கு ஒன்றிரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையில் கிடைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து விவசாயி மகேந்திரன் கூறுகையில், "காவிரி தண்ணீர் காலதாமாதமாக வந்தாலும் விவசாயம் செய்துள்ளோம். இந்த நிலையில் நடவு செய்து 25 நாட்களை கடந்தும் யூரியா இன்றி டெல்டா மாவட்டம் முழுவதும் தட்டுபாடு நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
அரசு அலுவலர்களும், அமைச்சர்களும் விவசாயிகளை பற்றிக் கவலை படாமல் மெத்தன போக்காக செயல்படுகிறார்கள். உரத் தட்டுப்பாட்டை போக்கவில்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் யூரியா உரத் தட்டுப்பாடு - கலங்கிய விவசாயிகள்!