திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்துவருபவர் சரஸ்வதி (50). இவர் தஞ்சை தொம்பன் குடிசைப் பகுதியில் வசித்துவருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகராட்சி காசோலையை நகராட்சி உதவியாளர் செல்வம் என்பவரிடம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிற்கு சென்று பணமாக மாற்றிவருமாறு கொடுத்தனுப்பியுள்ளார்.
வங்கியில் காசோலையை பரிசோதித்த வங்கி ஊழியர், அதிலிருந்த கையெழுத்து இதற்கு முன்பு ஆணையர் பொறுப்பு வகித்த ஜெகதீஸ்வரியுடையது என்பது தெரியவந்தது. உடனே வங்கி ஊழியர் தற்போதைய நகராட்சி ஆணையர் பொறுப்பிலுள்ள திருமலைவாசனுக்கு தகவல்தெரிவித்தார்.
இதனையடுத்து விசாரணை செய்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் அந்த வங்கிக் காசோலையிலிருந்தது ஜெகதீஸ்வரியின் கையெழுத்து என்பதை உறுதிசெய்தார்.
மேலும், இதேபோன்று 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது ஆணையராக இருந்த விஸ்வநாதன் என்பவரது கையெழுத்தை போலியாக போட்டு மூன்று லட்சத்து 42 ஆயித்து 720 ரூபாய் எடுத்து சரஸ்வதி மோசடி செய்ததையும் அவர் கண்டறிந்தார்.
இதனையடுத்து திருமலைவாசன் தஞ்சையில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் உமாமகேஸ்வரிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். தற்போது மோசடி செய்த பெண் அலுவலர்மீது துறைரீதியிலான விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நகை அடகு நிறுவனத்தில் 46.72 லட்சம் ரூபாய் மோசடி