தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. நேற்றுவரை 1,242 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 118 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாகத் திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதியான விஜயபுரம் கடை வீதிக்கு அருகில் உள்ள வண்டிக்காரத்தெரு, ஐந்நூறு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இரண்டு தெருக்களிலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தெருக்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் தொடர்பின்றி அடைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது. இந்நிலையில் கடை வீதிக்கு வரும் மக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டு விஜயபுரத்தில் இயங்கிவந்த அத்தியாவசிய கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம்செய்து நகராட்சி நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 56 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 44 பேர் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாகப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள் கூட்டம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் பங்கேற்பு