திருவாரூர்: நன்னிலம் அருகே பேரளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், கஸ்தூரி தம்பதியினர். சாராய வியாபாரியான கஸ்தூரியை கடந்த 12ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 23ஆம் தேதி கஸ்தூரிக்கு சிறையில் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பெற்று வரும் கஸ்தூரிக்கு பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 1) இரவு சிகிச்சைப்பெற்று வந்த கைதி கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனையடுத்து பாதுகாப்புப்பணியில் இருந்த பெண் காவலர்கள் உயர் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய பெண் கைதியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 9 வயதிலிருந்து பாலியல் தொந்தரவு... இளம்பெண்ணின் தாய், அத்தை உள்ளிட்ட 3 பேர் கைது