திருச்சி: மனிதநேய மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்டம் தென்னூரில் நடைபெற்றது. இந்த விழாவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, “திருச்சி மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளி ஒன்றில் மாணவி பாலியல் சீண்டல் விவகாரம் மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர். இது போன்ற பாலியல் விவகாரங்களில் கைது மட்டுமே தீர்வாக அமையாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொல்வது போல் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வித்துறையில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும்.
குற்றவாளிகள் கல்வித்துறையில் மீண்டும் நுழைய முடியாத படி அரசு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்கள் ஊடங்கங்களில் 4 நாட்கள் பேசி மட்டும் விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கூட இதுபோன்ற அநியாயங்கள் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தினர் 5 பேர் மீது போக்சோ வழக்கு! - TRICHY SCHOOL GIRL ABUSE POCSO CASE
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாரந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் காரணமாக தான் பிள்ளைகள் பெற்றோர்களிடத்தில் சொல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் விரிவுபடுத்தி பெண் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள் கற்றவர்களாக வருவதற்கு எந்த ஒரு தடையும் நாட்டில் இருக்கக் கூடாது” என தெரிவித்தார்.