திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாத்தூர், பழையாறு, வேலங்குடி, சங்கமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பாசன வாய்க்கால்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மோலாக தூர்வாரப்படாததால் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் புதர் மண்டி காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் இந்த விளை நிலங்கள் அனைத்தும் தரிசாக மாறியுள்ளன. ஆனால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டும் அந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என்ற ஏக்கத்துடன் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தற்போது இந்த பாசன வாய்க்கால்கள் இடம் தெரியாமல் போய்விட்டன. இவற்றை நம்பி இருந்த 500 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறியதோடு கருவேல மரங்கள் பல வளர்ந்து இந்த நிலங்கள் உழவு செய்வதற்கான தன்மை இழந்து நிற்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கருவேல மரங்கள் முளைத்தும், காடுகள் மண்டியும் வாய்க்கால்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்த ஆண்டாவது விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இருந்தும் மேட்டூர் தண்ணீர் துளிகூட வராததால் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாகவே மாறி விளைநிலங்கள் அதன் தன்மை இழந்து நிற்கின்றன" என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கவனத்தில்கொண்டு வாய்க்கால்களை தூர்வாரி கொடுத்தால் இந்த 500 ஏக்கர் விளைநிலங்களை மீட்டு சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க... தூர்வாரப்படாததால் காணாமல் போன நாட்டாறு பாசனக்கால்வாய்: விவசாயிகள் வேதனை!