திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் உள்ளது. அதன் அருகில், மக்கள் இறந்தவர்களின் சடலங்களை எரித்துவிட்டு, மரத்திற்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் பொதுப்பணித்துறை சார்பில் அந்த மரத்தை வெட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, டெண்டர் எடுத்தவர்கள் மரத்தை வெட்ட முயன்றபோது அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெட்ட விடாமல் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், இந்த மரமானது தங்கள் இடுகாட்டுக்குச் சொந்தமானது. இந்த மரத்தை நாங்கள் தெய்வமாகப் பார்க்கிறோம். இதை வெட்டும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை