திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர். அமிர்தவள்ளி (75). இவர் பொதுநலம் கருதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்’’ மன்னார்குடி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட தலையாமங்கலம் பஞ்சாயத்தில், ஒன்றிய அரசின் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2017- 2019ஆம் ஆண்டுகளில் 225 வீடுகளும், 493 கழிவறைகளும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், ஒரு சில வீடுகள், கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. தேர்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கான 144 வீடுகளும், 433 கழிவறைகளும் கட்டிதரப் படவில்லை. இதில் மிகப்பெரிய கையாடல் நடைப்பெற்றுள்ளதாக தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் 2017 - 2019 ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதால், தலையாமங்கலம் ஊராட்சியை நிர்வகிக்க செயலாளராக ராஜ்மோகன் நியமிக்கபட்டார். ஆனால், அவர் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் தனது சகோதரர் பாஸ்கரனை வீடு, கழிவறைகள் கட்டும் திட்டத்தை ஒப்படைத்ததாக குற்றம்சாட்டினார்.
கட்டுமானங்களை முடித்து பயனாளிகளிடம் தராமலேயே, ஐந்து கோடிக்கு கணக்கு காட்டி மோசடி செய்துள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலரான கலைச்செல்வன் என்பவருடன் கூட்டு சேர்ந்து அரசு ஒதுக்கிய நிதியில் கையாடல் செய்யப்பட்டது.
எனவே, ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டபடாமல் உள்ள 144 வீடுகள், 433 கழிவறைகளை கட்டிதர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: உ.பி - 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்!