பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நேற்று சந்திர கிரகணம் பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை தோன்றியது. இதனால் கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால் அண்ணாமலையார் சுயம்பு லிங்கமாக இருப்பதால் கிரகண காலத்தில் கோயில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது. சூரிய கிரகணத்தின் போது கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும், சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடிந்த பின்பும் தீர்த்தவாரி நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் அஸ்த்ர தேவருக்கு மகா தீர்த்தவாரி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரிவியங்களை கொண்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இறுதியாக சிறப்பு பூஜை செய்த புனித கலச நீரை ஊற்றி, பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவியேற்பு