திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று ஏழாவது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் மளிகைக் கடை, காய்கறிக் கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் வணிகர்களின் முழு ஒத்துழைப்புடன் மூடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்களும், வியாபாரிகளும், தாங்களாகவே முன்வந்து நிறுவனங்களை மூடி முழு ஊரடங்கினைக் ஒருமனதாக கடைபிடித்துவருகின்றன.
பெட்ரோல் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், ஆள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
காவல்துறையினர், நகரப்பகுதிகளில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் நகருக்குள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஏழாவது ஞாயிற்றுக் கிழமையாக நகரம் முழுவதும் இன்று தான் முதல் முறையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது போல் காணப்படுகிறது.
மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு ஒன்பதாயிரத்தை நெருங்கும் நிலையில் மக்கள் நோய் தொற்று அச்சம் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.