திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 64 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 10 பேர் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். சிகிச்சை பெற்று வரும் ஒன்பது பேர் ஆரோக்கியமாக உள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 7 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகின்ற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அவர்களுக்கு வேகமான முறையில் சோதனை செய்யப்படும்.
உடனுக்குடன் டெஸ்ட் செய்வதன் மூலம் சனிக்கிழமை முதல் சமூக பரவல் இருக்கிறதா என்பது தெரியவரும். கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் அறிகுறி தெரிந்தால் அவர்களே வந்து டெஸ்ட் செய்துகொண்டு செல்கின்றனர். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டும், அதனை சரியாக பின்பற்றாமல் உள்ளனர்.
வெளியூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தவர்களை தங்க வைப்பதற்கு மூன்று இடங்களில் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சேலம் காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு