திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீட்டு மனை பட்டாக்கள் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கிய வீட்டு மனைகளுக்கு அருகில் அந்த மக்களின் பயன்பாட்டுக்காக சுமார் 50சென்ட் இடத்தை, அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாயக்கூடம் உள்ளிட்ட பிற்கால பொதுப்பயன்பாட்டிற்கான கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாச்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசின் சார்பில் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம்,சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல் சில தனிநபர்களிடம் 20ஆயிரம் முதல் 10லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும் மெத்தனம்காட்டி வருவாதகவும், பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாச்சியர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் மாவட்ட ஆட்சியரும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 100க்கம் மேற்பட்டோர் தங்களின் ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை,குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது விட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வோம் என மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.