கரோனா தொற்று சமூக பரவலாக தொடங்கியுள்ளதா என்று கண்டறிய மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்தனர். இதில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் வானாபுரம் அருகே உள்ள எடக்கல், போளூர் அருகே உள்ள புஷ்பகிரி, செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு, கலசபாக்கம் அருகே உள்ள மேல்பாலூர் உள்பட ஆறு கிராமங்களும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் என மொத்தம் 10 கிராமங்களை தேர்வு செய்தனர்.
இந்தக் கிராமங்களுக்கு இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் கொண்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் குழுவினர் நேரடியாக அந்த கிராமங்களுக்குச் சென்று ஒரு கிராமத்துக்கு 40 நபர்கள் என மொத்தம் 10 கிராமங்களில் 400 நபர்களின் சளி மாதிரிகளை சேகரித்தனர்.
![ICMR collects sample in tiruvannamalai to test community spread](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-06-icmr-checkup-script-7203277_17052020214540_1705f_1589732140_114.jpg)
அதனையடுத்து 400 நபர்களின் சளி மாதிரிகளுடன் சென்னைக்கு சென்றனர். அங்குள்ள ஆய்வகத்தில் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து, அதன் பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும் என மருத்துவத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... திருவண்ணாமலையில் மேலும் 3 பேருக்கு கரோனா உறுதி!