திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ரோஜா, மல்லி, சாமந்தி, கோழிகொண்டை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் திருவண்ணாமலை பூ சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பெங்களூரு, வேலூர், விருதாச்சலம், பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
திருவண்ணாமலை பூ சந்தையில், கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பூக்களின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக சாமந்தி பூக்களின் விலை மிகவும் சரிந்துள்ளது.
பொங்கல் தினங்களில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சமாந்தி பூ நேற்று முன்தினம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், வியாபாரிகள் பூக்களை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்த பூக்களை, இன்று வியாபாரிகள் குப்பையில் கொட்டினால், நாளை விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் கூட கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50 செண்ட் நிலத்தில் சாமந்தி பூ சாகுபடி செய்தால், செடி நாற்று வாங்கி நடவு செய்து, உரம், மருந்து தெளித்து, களை எடுத்து, பூ அறுவடை கூலி, விவசாயி உழைப்பு என ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. சராசரியாக பார்த்தாலும் மொத்த வருமானமும் ஒரு லட்சம் ரூபாய் தான் கிடைக்கிறது. ஒட்டு மொத்த குடும்ப உழைப்பையும் மீறி, 12 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பணம் சம்பாதிக்க பல வழிகள் இருந்தாலும், உணவு சம்பாதிக்க விவசாயம் மட்டுமே ஒரேவழி என்ற நோக்கத்தில் தான், விவசாயிகள் இன்றும் உளவு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு உரம், இடுபொருட்களை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கினால். அதன் மூலம் நஷ்டத்திலிருந்து மீள முடியும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: விதை வெங்காயம் கிலோ ரூ. 190க்கு விற்பனை - விவசாயிகள் கவலை