திருவள்ளூர்: Kanimozhi MP: மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள் ஏற்பாட்டில் திருவள்ளூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தற்போதைய ஆட்சியின் மீது பெண்களின் நம்பிக்கை
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கனிமொழி, ”காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி முடிவு தேர்தலுக்குப் பிறகுதான் உறுதி செய்யப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிகப் பெண்கள் வெளிப்படைத்தன்மையாக பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால், கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றம்கூட தற்போது நடைபெறும் ஆட்சியில் சொல்ல முன் வந்துள்ளனர். திருவொற்றியூர் அடுக்குமாடிக் குடியிருப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” எனக் கூறினார்.
பெண்களுக்கு சேவை செய்யக்கூடிய ஆட்சி
அதற்கு முன்பாக மேடையில் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பெண்களுக்கான உரிமை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கியத்துவம் தந்து வருவதாகக் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதலமைச்சராக இருந்து வருவதாகக் கூறினார்.
மேலும், பெண்கள் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வழிவகை செய்ததால், ஆண்கள் தங்கள் மனைவியைப் பல்வேறு வேலைக்கு அனுப்பி வருவதாகத் தெரிவித்தார்.
பொதுவெளியில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய பெண்களுக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாய்ப்பு அளித்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு