திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் தை மாத பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான நேற்று தீர்த்தவாரியுடன், சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் திருக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தை பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான நேற்று பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் முக்கிய மாடவீதிகளின் வழியாக பல்லக்கில் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சக்கரத்தாழ்வார், சின்னபெருமாள் சிலைகளுக்கு கோயில் குளத்தில் நீராடல் நடைபெற்றது.
வீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு குளத்தில் நீராடினர்.
இதையும் படிங்க: