திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைச் சிறைக்காவலர், தீயணைப்புத் துறை வீரர் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
எட்டு மையங்களில் நடைபெற்ற தேர்வில், 12 ஆயிரத்து 484 பேர் பங்கேற்றுக் கொண்டனர். இதில், திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1,645 பெண்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், வெப்பமானி சோதனையையும் செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.
மேலும், திருப்பாச்சூரில் பெண்கள் தேர்வு எழுதும் மையத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரில் ஆய்வுசெய்தது குறிப்பிடத்தக்கது.