திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்ற பூந்தமல்லி காவல்நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர், கோவிலைச் சோதனை செய்தபோது, மர்மநபர்கள் கோயிலில் வைத்திருந்த உண்டியலையும், அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 5 பவுன் தாலியையும் தூக்கிச் சென்றது தெரியவந்தது.
அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கத்தியுடன் மாணவர்கள் உலா...! போலீஸ் விசாரணை...!