திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கும், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி எனப் பல்வேறு பகுதிகளுக்கும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வருகிற 26ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
பெரம்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ஜூலி மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இதே போல் சோதனை திருவள்ளூர் ஏகாட்டூர், கடம்பத்தூர், மோசூர், செஞ்சிபணம்பக்கம், மணவூர், திருவலாங்காடு, புளியமங்கலம் போன்ற ரயில் நிலையங்களிலும் நடந்தது.
ரயில் நிலைய ஆய்வின் போது, திருவள்ளூர் மாவட்ட ரயில்வே காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அட அட.. விமான நிலையத்தில் ராஷ்மிகா!