திருவள்ளூர் மாவட்டம், விடையூர் ஊராட்சியில் பொதுமக்கள் காவல் துறையினரின் நல்லுறவு, கரோனா விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "காவல் துறை பொது மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். காவல்துறை எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் பொது மக்களின் பிரச்சனைகளுக்காக முதலில் ஓடி வந்து உதவி செய்யும்.
ஆகவே, தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து அனைத்து காவலர்களையும் தவறாக எண்ண வேண்டாம். ஒரு சில காவலர்கள் செய்யும் தவறால் அனைத்து காவல்துறை அலுவலர்களின் பெயரும் கெட்டுவிடுகிறது.
எந்த நேரத்திலும் உதவி செய்ய காவல்துறை காத்திருக்கிறது" என்றார். விடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு தற்போது சில தளர்வுகள் அளித்திருந்தாலும் பொது மக்கள் விழிப்புடன், தனித்திருக்க வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும்போது தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், ஊராட்சியில் தொற்று பரவாமல் இருப்பதாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அவர் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் தயாநிதி, ஒன்றிய கவுன்சிலர் ராணி சிவா, துணைத்தலைவர் மாலா மகாலிங்கம், வார்டு உறுப்பினர்கள் காமாட்சி முருகன், முனியம்மாள், காத்தவராயன், முத்து மகேஸ்வரி, விநாயகமூர்த்தி, குருசாமி கணேஷ்குமார், மோகன ரமேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை