மத்திய பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் எஸ்டேட் மேலாண்மை நிறுவனமும் இணைந்து விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நடைபயணத்தில், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தூய்மை உறுதிமொழி பதாகைகளைப் பிடித்துக்கொண்டே நெகிழியிலிருந்து சுற்றுப்புறம் காப்போம் என்ற முழக்கங்களுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை, நிறுவன இயக்குநரும் விஞ்ஞானியுமான பாலமுருகன் தொடங்கி வைத்தார். அதன் பின் நெகிழியால் ஏற்படும் தீங்கு, அதனை ஒழிப்பதற்கான அவசியம் உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் கூறி சுற்றுப்புறங்களில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுமார் ஐந்து கி.மீ தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சாலையில் கிடக்கும் நெகிழிப் பொருள்களை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் அகற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: