திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை 1269 பெண்கள் காவல் நிலையங்களுக்கு உதவி கேட்டு வந்துள்ளனர். அவர்களில் சுமார் 640 பேர் குழந்தையுடன் காவல் நிலையத்தை அணுகி உள்ளனர்.
எனவே, காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்பொருட்டு திருவள்ளூர் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புக் காவல் துறை பிரிவும்; இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அமைப்பும் இணைந்து குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறை கொண்ட காவல் நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டன. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளைப் பாதுகாக்கும் காவல் நிலையங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”காவல் நிலையம் வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க மகளிர் காவல் நிலையத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் இடம், விளையாட்டு உபகரணங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு 60 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 48 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க:
கார்திகை மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ சோலீஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை..!