நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு நெல்லை அருங்காட்சியகம் மற்றும் நெல்லை இந்து கல்லூரி விலங்கியல் துறை இணைந்து காட்டுயிர் பேணுதல் என்ற தலைப்பில் தேசிய இணையவழி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த இணையவழி கருத்தரங்கில் நெல்லை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி தலைமையயேற்றார். இதில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
காட்டுயிர் குறித்த மூத்த ஆராய்ச்சியாளர் மதிவாணன் இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காட்டுயிரின் நன்மைகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு பேண வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
நிகழ்ச்சி குறித்துப் பேசிய நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி, " வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று காட்டுயிர் பேணல் என்ற தலைப்பில் தேசிய இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மூத்த ஆராய்சியாளர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காட்டுயிரின் நன்மை குறித்து விளக்கம் அளித்தார்.
100 பேர் மட்டுமே ஜூம் மீட்டிங்கில் பங்கேற்க முடியும் என்பதால் மீதமுள்ளவர்கள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் யூடியூப் சேனல் வாயிலாக கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: இணையவழிக் கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு தொலைதூர கனவாகவே உள்ளது!