"நீரின்றி அமையாது உலகு" என்பது வான்புகழ் பாடிய வள்ளுவனின் வாக்கு! அது வெறும் வாக்கு மட்டுமல்ல; ஓர் வாழ்வியல் உண்மையும்கூட. நீரின்றி நிலத்தைப் பண்படுத்தல் நிகழாது. நிலமின்றி உணவு உற்பத்தி இல்லை. உணவு உற்பத்தியின்றி உயிர்கள் வாழ்வதில்லை. நீராலேயே இவ்வுலகு அமைந்ததிருக்கிறது. வானம் பார்த்த வறண்ட பூமியில் வேளாண்குடி மக்களின் கடைசி நம்பிக்கை கிணறு.
இந்தியாவின் முதுகெலும்பாகப் போற்றப்பட்ட விவசாயத்திற்குள்பட்ட அமைப்புசாரா தொழில்கள் ஏராளம். அதில், கிணறு வெட்டும் பணி முதன்மையானதாகும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பளவு கொண்ட புன்செய் - நன்செய் வேளாண் நிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிணற்று பாசனத்தின் மூலமாக விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. அத்தகைய கிணறு வெட்டும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுப் பரவும் அசாதாரண சூழலில் அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் ஒரே வாய்ப்பாக உள்ளது. இருப்பினும் இந்த நீண்ட ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலர் பல்வேறு மாவட்டங்களில் சிக்கித் தவித்துவருவதையும் அறிய முடிகிறது.
விவசாயத்திற்குள்பட்ட அமைப்புசாரா தொழிலான கிணறு வெட்டும் தொழிலிலுக்குப் பெயர்பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளை அணுகி அவர்களுக்கு கிணறு வெட்டி கொடுப்பது, கிணற்றைச் சுத்தம் செய்துகொடுப்பது ஆகிய வேலைகளைச் செய்துவருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில் தங்கி கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டுவந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலைக்குச் செல்லமுடியாமல் சுத்தமல்லி அருகே தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில் முடங்கிக் கிடக்கின்றனர்.
வேலையிழந்து தவிக்கும் இவர்கள் உணவிற்கும் திண்டாடிவருகின்றனர். தொழிலாளர்களின் நிலைமை குறித்து தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலையடுத்து அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு வழங்கிய நிவாரணப் பொருள்கள் போதவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தொழிலாளி செல்லமுத்து கூறுகையில், “கிணறு வெட்டும் வேலையைச் செய்துவருகிறோம். இந்த ஒரு மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறோம். ஊரடங்கு உத்தரவால் எங்கும் செல்ல முடியவில்லை வேலையில்லாமல் சும்மாதான் இருக்கிறோம்.
வெளி மாவட்டத்திற்கும் செல்ல முடியவில்லை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குழந்தையுடன் தவித்துவருகிறோம். இரண்டு மூன்று இடங்களில் வேலை வந்துள்ளது, ஆனால் போக முடியவில்லை. விவசாய பணிகளுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. இதே போல் நாங்களும் விவசாயம் சார்ந்த பணிகள்தான் செய்கிறோம்.
எனவே எங்களுக்கும் அரசு அனுமதியளிக்க வேண்டும் இந்த நேரத்தில் கோடைகாலம் என்பதால் விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாது, எனவே அனுமதி அளித்தால் விவசாய தேவையை பூர்த்திசெய்வோம்” என வேதனையை பகிர்ந்தார்.
சொந்த ஊரில் தவிக்கும் தனது குழந்தையைப் பார்க்க ஆசையாக இருப்பதாகக் கூறும் பெண் தொழிலாளி ராதா என்பவர், இக்கட்டான நிலை குறித்து நம்மிடம் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்திலிருந்து வேலை பார்ப்பதற்காக திருநெல்வேலிக்கு வந்துள்ளோம்.
கரோனாவால் வேலையில்லாமல் சும்மா இருக்கிறோம் சாப்பாட்டுக்கு வழியில்லை. குழந்தைகள் ஊரில் இருக்கிறார்கள். அங்கேயும் போக முடியவில்லை. விவசாயம் பார்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே எங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் சாப்பாட்டுக்கு வழியில்லை. இங்கிருந்து எங்களாலும் பணம் அனுப்ப முடியவில்லை” என்று தெரிவித்தார்.
ஊரடங்கை நீட்டிக்கவா, வேண்டாமா? என அரசு ஆலோசிக்கும் இதேவேளையில், கிணறு வெட்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை.
ஒன்று வேலைசெய்ய அனுமதி அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே இவர்களின் இறுதியான எதிர்பார்ப்பு!
இதையும் படிங்க : உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முன்வருமா தமிழ்நாடு அரசு ?