நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரத்து 800 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
நெல்லையில் கரோனோ பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் நாள்தோறும் சராசரியாக 100-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நாராயணனுக்கு இன்று (செப்டம்பர் 23) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதாவது, அவரது மகளுக்கு ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக எம்எல்ஏ நாராயணன், அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் நாராயணனுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நெல்லை மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனிமைப் பிரிவில் மருத்துவம் பெற்றுவருகிறார்.