தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் வகையில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள்விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28 லட்சம் ரூபாய் செலவில் காவிரி, பவானி, தாமிரபரணி ஆறுகளில் நாட்டின கெண்டை மீன்கள் இருப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் முருகையா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றில் மணிமுத்தாறு அரசு மீன் பண்ணையில் வளர்க்கப்பட்ட இரண்டு லட்சம் கல்பாசி மீன் விரலிகளை இருப்பு விட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் விரைவில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படும். பிரதமரின் வேளாண் உதவித்தொகை திட்டத்தில் மோசடி தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
வெளிமாவட்டங்களில் உள்ளவர்களின் கணக்குகள் என்று கண்டறியப்பட்ட 400 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன என்றார்.