தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ளது ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில். முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 7நாள்கள் திருவிழா நடைபெறும். தீச்சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தல், சேற்றாண்டி வேஷம் போன்ற நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
மேலும் இரவு, பகலாக நடைபெறும் ராட்டினம், சர்க்கஸ், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசிப்பதற்கு தென் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமனோர் வந்து செல்வர். இந்தாண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ஆம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கி, ஏப்ரல் 22ஆம் தேதி திருக்கம்பம் நடப்பட்டு முக்கிய விழா மே 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் நடைபெறயிருந்த சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கோயில் செயல் அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டிருப்பது, தேனி மாவட்ட மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்