புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், கொள்கை பரப்புச் செயலருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தேனி, பள்ளிவாசல் பகுதியிலிருந்து தங்களது ஊர்வலத்தைத் தொடங்கி, பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ”கரோனா காலத்தில் அரசு அறிவித்த சிறப்பு ஊதியமான இரட்டிப்பு சம்பளத்தை மூன்று மாதத்திற்கு கணக்கீடு செய்து வழங்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்த இந்த சாலை மறியலால் தேனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்போராட்டத்தின்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன் "வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் ஈடுபட்ட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி மறியல் போராட்டம்