தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலை பகுதியில் காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 8 பேர் கொண்ட கும்பல், காரில் இருந்த மூடைகளை இருசக்கர வாகனத்தில் மாற்றிக்கொண்டிருந்தது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கேரளாவில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த, தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் (31), கம்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(41), கணேசன்(29), பார்த்திபன் (27) இராயப்பன்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி(35), தினேஷ்குமார்(23) ஆகிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 52 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் இருவர் தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர், காரில் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும், கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடந்து சென்றவரிடம் நகை, பணம் பறித்த கும்பல் கைது !