தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தற்போதே எழுந்து விட்டது. அக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சிலர், ஓ. பன்னீர்செல்வம்தான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு! அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதே எனது அன்பு வேண்டுகோள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்களால் "தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்களின் முதலமைச்சர், ஏழை எளியோர்களின் முதலமைச்சர், அம்மாவின் அரசியல் வாரிசு, என்றென்றும் தமிழினத்தின் நிரந்தர முதலமைச்சர் ஓபிஎஸ் என்று அச்சிடப்பட்ட அந்த சுவரொட்டியில், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்துடன், ஓபிஎஸ் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், #2021_CM_FOR_OPS என்ற ஹேஷ்டேக் வாசகங்களும் அதில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் தேனி மாவட்டம் போடி ஒன்றியத்தில் கெஞ்சம்பட்டி கிராமம் மற்றும் தேனி அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ஓபிஎஸ்-இன் சொந்த ஊரிலேயே அவரை முன்னிலைப்படுத்தி ஒட்டப்பட்டுவரும் இந்த சுவரொட்டிகளால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்" - பொள்ளாச்சி ஜெயராமன்